ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!

அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தலைவர் நான்சி பெலோசி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க 25ஆவது சட்டத்திருத்தத்தின் அதிகாரங்களை செயற்படுத்தும்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸை வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்தை நான்சி பெலோசி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
எனினும் இந்த கண்டனத் தீர்மானம் தொடர்பாக செனட் சபையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.