தனிமைப்படுத்தப்படவுள்ள மேலும் சில இடங்கள் – இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு!
In இலங்கை November 15, 2020 9:30 am GMT 0 Comments 2011 by : Dhackshala

நாட்டின் சில இடங்கள் நாளை தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்குள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் நாளை காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் அதிகளவான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன.
ஆகவே இவற்றை மூட முடியாது. எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பவில்லை. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் கடமையாற்றும் பணியாளர்கள் தனது நிறுவனத்தை உறுதிப்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தல் பகுதிக்குள் பிரவேசிக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.