தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் ஜெனீவாவில் இலங்கையை தண்டிக்க முயற்சிக்கின்றனர் – விமல்
In இலங்கை February 9, 2021 6:28 am GMT 0 Comments 1464 by : Dhackshala

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையை காட்டிக்கொடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை ஆதரித்ததன் விளைவாகவே தம்மால் எந்தவொரு சுயாதீன தீர்மானமும் எடுக்க முடியாது போனது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தாம் இன்று அனைத்தையும் நிராகரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளோம் என்றும் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையில் இருந்து தாம் வெளியேறிவிட்டோம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.
எனினும் தமது இராணுவம் மீதும் தமது ஆட்சி மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வேறு வழியில் தமது இராச்சியத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எவும் விமல் தெரிவித்துள்ளார்.
எனினும் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளுக்கும் அரசாங்கம் பதில் தெரிவிக்கும். அதேபோல் தமது இராணுவத்தை காப்பாற்றும் சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்த பின்னர் விடுதலைப் புலிகளை அழித்ததை விரும்பாதவர்களும் இந்நாட்டில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்களுமே தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.