திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்களஞ்சிய தொகுதி – ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்தது இந்தியா
In இலங்கை February 19, 2021 11:42 am GMT 0 Comments 1242 by : Yuganthini

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து, இயக்குதல் தொடர்பாக இந்தியா- இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
இவ்விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 2021 பெப்ரவரி 17ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் நிகழ்த்திய உரையினை இந்த அறிக்கைகள் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. இந்நிலையிலேயே இந்த விடயத்தினை ஊடக சந்திப்பொன்றின் மூலமும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு அமைச்சரின் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது போலவே, 2017 இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் குறித்த எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து, இயக்குவதற்கு பரஸ்பரம் ஏற்புடையதான முறைமைகள் குறித்து இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.
இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.