நெடுந்தீவிற்கான நெடுந்தாரகையின் சேவை மீண்டும் ஆரம்பம்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்துச் சேவையை நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தாரகை படகினை, சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான எரிபொருளை வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் குறித்த படகுச் சேவை ஆரம்பமாகின்றது,
நெடுந்தீவு-குறிக்கட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் வடதாரகை, குமுதினி, மற்றும் நெடுந்தாரகை ஆகிய அரச படகுகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வடதாரகை பயணிகள் படகு பழுதடைந்து திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்குச் சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவைப்பட்ட நிலையில், ஏற்பட்ட அதிக செலவீனம் காரணமாக குறித்த பிரதேச சபையினால் நெடுந்தாரகையின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட புரெவி புயல் காரணமாக குமுதினி பயணிகள் படகும் பழுதடைந்துள்ள நிலையில் நெடுந்தீவிற்கான அரச போக்குவரத்துக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.
குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் குமுதினி படகினை பழுதுபார்த்து விரைவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.