குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215ஆக அதிகரிப்பு- UPDATE
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இலங்கை குண்டுவெடிப்பு – 200ஐ தாண்டியது உயிரிழப்பு
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 450 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதில் நீர்கொழும்பிலேயே அதிகபட்ச உயிரிழப்பாக 104 பதிவாகியுள்ளது.
6 குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாத்திரமே உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் 66 பேர் உயிரிழந்ததோடு, 260 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் 104 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 பேர் காயமடைந்துள்ளனர். ஏனைய இடங்களில் 28 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு -UPDATE
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 465ஆக அதிகரித்துள்ளது.
பல பகுதிகளில் குண்டுவெடிப்பு – நாடளாவிய ரீதியில் 138 பேர் உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்தோடு, 402 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.