பிரதமரின் தலைமையில் தீகவாவி தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
In இலங்கை November 11, 2020 11:40 am GMT 0 Comments 1533 by : Vithushagan

‘சொலொஸ்மஸ்தான’விற்குரிய கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முக்கியத்துவத்திலும், அளவிலும் முன்னுரிமை பெறும் தீகவாவி புனித பூமியிலுள்ள தாதுகோபுரத்தை புனரமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டார்.
முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அதனை தொடர்ந்து பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தாதுகோபுர புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தீகவாவி ரஜமஹா விகாராதிபதி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளுக்கான துணை பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் சங்க கீர்த்தி ஸ்ரீ புத்தரக்கித சாம ஸ்ரீ சத்தர்ம வாகீஷ்வர, சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ, அகில இலங்கை சமாதான நீதவான், சாஷ்த்ரபதி வணக்கத்திற்குரிய மஹஓய சோபித்த தேரர் அனுசாசனம் நிகழ்த்தினார்.
போர் சூழலுக்கு மத்தியில் அழிக்கப்பட்டு, அபிவிருத்தி தடைப்பட்ட வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டதாக வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.
தீகவாவியை புனித பூமியாக வர்த்தமானியில் வெளியிட்டதன் மூலம் அதனை பாதுகாப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டதாக நினைவுகூர்ந்த வணக்கத்திற்குரிய சோபித்த தேரர், யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டை ஐக்கியப்படுத்திய பிரதமரின் வரவிருக்கும் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்தித்தார்.
நீண்ட காலமாக இயற்கையினாலும், மனித செயற்பாடுகளினாலும் சீரழிந்துள்ள தீகவாவி புனித பூமியை பல தசாப்தங்களாக பல தடவைகள் இலங்கை அரசாங்கம் மற்றும் பிற தரப்பினரால் புனரமைப்பதற்கு முயற்சித்த போதிலும் அந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
முப்படையினரின் முழுமையான பங்களிப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் ஆளனி பங்களிப்புடன் தொல்பொருள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைய இரண்டு வருட காலத்திற்குள் தாதுகோபுரத்தின் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புனரமைப்பு பணிக்கமைய தாதுகோபுரத்தை தரிசிப்பதற்கு வருகைத்தரும் பக்தர்கள் தங்குவதற்கு ஓய்வு விடுதியொன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாதுகாப்பு செயலாளருமான கமல் குணரத்ன அவர்கள் உள்ளிட்ட செயலணி ஆலோசித்துள்ளது.
புனித பூமியை அழகுபடுத்துவதற்கு மரங்களை நடும் திட்டமும் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஆரம்பித்து வைத்த கௌரவ பிரதமர் நாக மரக்கன்றொன்றை நாட்டி வைத்தார்.
தாதுகோபுர அண்டத்தின் காவல் வளையங்கள் மற்றும் விகாரை மடம் (விகாரகெய) என்பன ‘நா உயன’ மடத்தின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய அகுல்கமுவே ஆரியநந்த தேரரின் அனுசாசனத்திற்கேற்ப, நா உயன அறங்காவல் சபையின் நிதி நன்கொடையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்கான ரூபாய் 76 மில்லியன் காசோலை ‘நா உயன’ அறங்காவல் சபையின் செயலாளரினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவ பிரதேச செயலக பிரிவின் பிரதான சங்கநாயக்கர் அரிசிமலே ஆரண்ய சேனாசனாதிபதி வணக்கத்திற்குரிய பனாமுரே திலகவங்ஷ தலைமை தேரர், ‘நா உயன ஆரண்ய’ மடத்தின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய அகுல்கமுவே அரியநந்த தேரர், வணக்கத்திற்குரிய பொரளந்தே வஜிரஞான தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.