புதுச்சேரி அரசியல் விவகாரம் : நாராயணசாமியின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசு தலைவர்!
In இந்தியா February 24, 2021 3:35 am GMT 0 Comments 1161 by : Krushnamoorthy Dushanthini

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியமையால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால் எதிர்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன.
குறித்த கோரிக்கைக்கு அமைய துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது குறித்த தீர்மானத்தை நாராயணசாமி முன்மொழிந்து உரையாற்றினார்.
இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நாராயணசாமியுடன் தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனை அடுத்து ஆளுநர் தமிழிசையை சந்தித்த நாராயணசாமி முதலமைச்சர் அமைச்சர்களின் இராஜினாமா கடிதத்தை சமர்பித்தார். இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சிற்கு பரிந்துரை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.