மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் துணை இராணுவப் படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்தே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 27ஆம் திகதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உட்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னர் இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.
இந்நிலையில், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான தகவலை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அகபருதீன், மசூத் அசார் விவகாரத்தில் முன்னர் போட்டிருந்த முட்டுக்கட்டையை சீனா தற்போது விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.