மட்டக்களப்பில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு கட்டம் கட்டமாக தளர்த்தப்படுகிறது!
In இலங்கை November 20, 2020 6:27 am GMT 0 Comments 1575 by : Yuganthini
மட்டக்களப்பு- வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் கட்டம், கட்டமாக தளர்த்தப்பட்டுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6ஆவது கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட 82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளபட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில், எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.லதாகரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ.கமகே, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என அண்மையில் இனங்காணப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ்பிரிவினைச் சேர்ந்த பலர், கொரோனா தொற்றுக்கு இலக்காகினர்.
அதனைத் தொடர்ந்தே கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.