மரண தண்டனைத் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்க – சர்வதேச மன்னிப்புச் சபை மகஜர்

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களை, தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
இந்த கோரிக்கையடங்கிய மகஜரை ஒவ்வொருவரும் இணையத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பும் நடவடிக்கை ஒன்றையும் சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது.
அவசர நடவடிக்கை என்ற தலைப்பில் மன்னிப்புச்சபை இது தொடர்பான அறிக்கை ஒன்றினைத் தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “43வருட காலத்திற்குப் பின்னர் மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தூக்கிலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் கைதிகளின் விபரங்கள், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதிகள் குறித்து முற்றுமுழுதான இரகசியத்தன்மையே காணப்படுகின்றது.
அந்தக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றிய வரலாறு குறித்தும் எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் நேர்மையான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா? தங்கள் சார்பில் வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்களா?
மன்னிப்புக்கோருவது குறித்து அர்த்தமுள்ள செயன்முறை ஒன்றில் அவர்களால் ஈடுபடக்கூடியதாக இருந்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கும் முறையான பதில்கள் எவையுமில்லை.
இறுதியாக 1976 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு மறுதலையாக்கப்படும் வருடமாக 2019 இருக்கக்கூடாது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்கான மகஜரை ஒவ்வொருவரும் தாங்கள் சுயமாகவே எழுதி அனுப்பிவைக்க முடியும் என்றும், அல்லது மன்னிப்புச் சபையின் இணையத்தளப் பக்கத்திலுள்ள மாதிரிக் கடிதத்தைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் மாதிரிக் கடிதம் வருமாறு,
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு,
எதிர்வரும் நாட்களில் தூக்கிலிடப்படவுள்ளதாக நீங்கள் கூறியிருக்கின்ற 13 கைதிகளின் உயிர்களுக்காக மன்றாடி இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டையும், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களையும் முறியடிப்பதற்கு நீங்கள் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
ஆனால் அதற்கு மரண தண்டனை நிறைவேற்றம் உதவப் போவதில்லை. மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் குற்றச்செயல்கள் முடிவிற்கு வந்தமைக்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மரண தண்டனைக்குத் தற்காலிகத் தடையொன்றை விதிக்குமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.