மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
In இலங்கை November 20, 2020 9:24 am GMT 0 Comments 2072 by : Dhackshala

யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.
குறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்தே நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.
இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வழக்கை தள்ளுபடி செய்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சுனா, காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகினர்.
பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.