முடியாத பலவற்றை ராஜபக்ஷக்கள் செய்துகாட்டினர்- சி.பி. ரத்நாயக்க

முடியாது என்று கூறிய பலவற்றை ராஜபக்ஷக்கள் செய்துகாட்டினார்கள் என அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு இணையாக கொத்மலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், “எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நஷ்டம் எனவும் கடன்களைப் பெறமுடியாது என்றும் விமர்சிக்கப்படுகின்றது.
நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு செலவுத் திட்டம்கூட தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டுத் தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், கடந்த அரசாங்கம்தான் 99 வருடகால குத்தகைக்கு துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின்போதே பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இதனால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.
ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறமாட்டார் எனவும் அவருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது.
ராஜபக்ஷக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால், ராஜபக்ஷக்கள் அதனைச் செய்துமுடித்தனர்.
நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனவும் சுட்டிக்காட்டினர். எனினும் அபிவிருத்தியையும் செய்து காட்டினர். அதுமட்டுமல்லாது சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்றனர். ஆனால் ராஜபக்ஷக்கள் வெற்றிநடை போட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.