மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
டாக்கா மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 43.4 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 41 ஓட்டங்களையும் ஜோர்ன் ஓட்லே 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மொயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் மற்றும் சகிப் ஹல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹசன் மொஹமுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 33.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் 50 ஓட்டங்களையும் ஷகிப் ஹல் ஹசன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன், ஜேசன் மொஹமட் மற்றும் ரெய்மோன் ரெய்பர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை சாய்த்த பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் மெயிடி ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.