மோடியிடம் மீண்டும் ஆட்சி கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி தான் – மம்தா எச்சரிக்கை

பிரதமர் மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் நிலவும் ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்துக்கு மாற்றி விடுவார் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ”மோடியிடம், ‘கொள்ளையடி’. ‘கலகம் செய்’, ‘மக்களைக் கொல்’ ஆகிய மூன்று கோஷங்களே உள்ளன.
வங்கதேசத்துடனான அறுபது ஆண்டு பிரச்சினைக்கு 2015இல் திரிணமூல் காங்கிரஸ் தீர்வு கண்டது. ஆனால் சட்டப்பூர்வ குடிமக்களானவர்களை எல்லாம் அகதிகளாக மாற்றுவதற்கு பா.ஜ.க. ஒரு குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது.
நாங்கள் ஒருபோதும் குடிமக்களின் தேசியப் பதிவை அனுமதிக்க மாட்டோம். யார் நாட்டில் இருக்க வேண்டும்? யார் வெளியேற வேண்டும் என்று மோடி ஒருவர் தீர்மானிக்க முடியாது. குடியுரிமை (திருத்தச்) சட்டம் என்பது இந்த நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்றுவதற்கான மற்றொரு சதி ஆகும். பா.ஜ.க.வின் இந்த சதித் திட்டம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த சாய்வாலா (டீ கடைக்காரர்) இப்போது சவுக்கிதார் (காவலாளி) என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்” என மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.