மோடி பாசிசத்தின் ராஜா – மம்தா கடும் சாடல்

பிரதமர் மோடி பாசிசத்தின் ராஜா என மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கலவரம், கொலைகள் மூலமே பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்தானம் பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ராய்கஞ்ச் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்தானம் பெற்றவர். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயற்பாடுகளைக் கண்டு தற்கொலை செய்திருப்பார்.
மோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சியமைக்க இயலாது. ஏனென்றால், பா.ஜ.க.வை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரஸூக்கு இல்லை.
ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயற்படுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.