யாழில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – அரசாங்க அதிபர்
In இலங்கை January 3, 2021 6:45 am GMT 0 Comments 1448 by : Dhackshala

யாழில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இதேநேரம், யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பாக எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.