யாழ்.பல்கலைக்கழகத்தில் மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்துவைப்பு
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கியின் அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் மின்கல ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், ஏகெட் திட்டத்தின் நிதிப் பணிப்பாளர் க.கனகரட்ணம், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி தி.பத்மதாஸ், இரசாயனவியல் துறைத் தலைவர் கலாநிதி பி.ஐங்கரன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் எளிமையாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
அரிசோனா அரச பல்கலைக்கழகம்-அமெரிக்கா, சால்மேர்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்-சுவீடன், தேசிய விஞ்ஞான நிறுவனம்-கண்டி, விஞ்ஞான பீடம் யாழ். பல்கலைக்கழகம் என்பவற்றின் கூட்டு ஆராய்ச் சித்திட்டமாக எளிதில் கிடைக்கக்கூடிய சோடியம் மற்றும் மக்னீசியத்தினைப் பயன்படுத்தி புத்தாக்கமாக பல சவால்களை எதிர்கொண்டு மேம்பாடான உற்பத்திச் செலவு குறைந்த எளிதில் கிடைக்கக்கூடிய மின்கலங்களின் தொழில்நுட்பமானது வடிவமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.