பதற்றநிலை நீடிக்கிறது – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு நின்றிருந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பொலிஸாரிடம் வினவிய போது, அவர்கள் கைது சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இராமநாதன் வீதி எங்கும் யாழ். பல்கலை மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் திரண்டுள்ளனர்.
இதனால், யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் நீடிக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.