யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று
In ஆசிரியர் தெரிவு November 27, 2020 2:39 am GMT 0 Comments 1606 by : Yuganthini
இலங்கையில் தமிழர்கள் உரிமைகோரிப் போராடிய மூன்று தசாப்த கால யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுகின்றது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாகக் கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன் 1982ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாலை 06:05 மணிக்கு உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் உயிரிழந்த நாளை மையப்படுத்தி, 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சூழலில் கடந்த அரசாங்கத்தில் மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் தற்போதைய அரசாங்கத்தினால் நினைவுகூரல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல், பொதுத் தொல்லை மற்றும் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுதிரண்டு அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கும் பொலிஸாரின் விண்ணப்பங்களை ஏற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக முன்னிலையாகி தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது.
மேலும், குறித்த தடை உத்தரவுக்கு எதிராக மாவீரர்களின் உறவினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், இம்முறை மாவீரரை நாளை வீடுகளில் இருந்து கார்த்திகை-27இல் மாலை 06:05 மணிக்கு விளக்கேற்றி நினைவுகூருமாறு தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அறிவிப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் பேரெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.