லங்கா பிரீமியர் லீக்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது யாழ்ப்பாண அணி!

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
தம்புள்ள வைக்கிங் அணிக்கெதிரான இந்தப் போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சார்ளஸ் 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், பதிலுக்கு 166 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணிசார்பாக, உபுல் தரங்க 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சில் வனின்டு கசரங்க மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடன் வரும் 16ஆம் திகதி மோதவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.