வவுணதீவு பொலிஸார் கொலையும் சஹரான் குழுவினரின் கைவரிசை! – பயங்கரவாதி சிக்கினார்?
In ஆசிரியர் தெரிவு April 27, 2019 4:52 am GMT 0 Comments 4558 by : Dhackshala
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் எனும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஆசாத்தின் தாயார் மற்றும் வாகன சாரதி உட்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.
இதன்போது அவரிடமிருந்து மடிக்கணணி மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின்போதே வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதிக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை கொழும்புக்கு கொண்டுச்சென்று விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.