தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெலங்கானாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதேவெளை, கனமழையை தொடர்ந்து முதல்வர் ரேவந்த் ரெட்டி மாவட்ட வருவாய் அலுவலர்கள், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், பிற துறை உயர் அதிகாரிகளை மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலரை தொடர்பு கொண்ட முதல்வர் ரேவந்த், வருவாய்த் துறை, மின்சாரம், சுகாதாரத் துறை அதிகாரிகளை முழுவீச்சில் செயல்பட உத்தரவிட வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் இவர்களில் ஐந்து பேர் விஜயவாடாவின் மொகல்ராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.
பல தாழ்வான பகுதிகளிலும் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதுவரை 80 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.