நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 முதல் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் பைதடி மாவட்ட பொலிஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 34 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் சம்பவம் இடம்பெற்றவுடன் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
பஸ்ஸின் சாரதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சி முடிந்து மணமகன் கிராமத்தை நோக்கி பஸ் பயணித்த போதும், மணமகனும் மணமகளும் வேறு வாகனத்தில் பயணித்ததால் அவர்கள் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளனர்.
நேபாளத்தில் குறுகிய மலைப்பாதைகள், சரியான பராமரிப்பின்றி உள்ள வாகனங்கள் மற்றும் மோசமான வீதித்தரநிலைகள் காரணமாக அடிக்கடி பஸ் விபத்துகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
















