ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடித்து வரும் மாணவர்கள் போராட்டத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அம்மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி ஜூலை 25ம் திகதி முதல் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இன்றுடம் போராட்டம் 16வது நாளை எட்டியது. அரசு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அரசுடன் பேச்சு நடத்துவது தொடர்பாகப் போராட்டக்காரர்களுக்கு இடையே இரு பிரிவுகள் ஏற்பட்டு, அவை மோதலாக மாறி துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், மாணவர் பிரதிநிதிகளுடன் ஆறாவது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பல சுற்றுப் பேச்சு நடைபெற்றபோதிலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜார்க்கண்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

















