இமயமலையின் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் 30 ஆண்டுகளாகப் பனியில் உறைந்திருந்த, ‘கிரீன் பூட்ஸ்’ (Green Boots) என உலகப் புகழ்பெற்ற இந்திய மலையேற்ற வீரர் டோர்ஜே மோரூப்பின் (Dorjee Moroop) உடலை மீட்டுத் தாய்நாடு கொண்டுவர இந்தியா சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
1996-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தைக் கைப்பற்றும் முயற்சியின் போது இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் (ITBP) லான்ஸ் நாயக் டோர்ஜே மோரூப், கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த பச்சை நிற மலையேற்றக் காலணிகளால் (Green Boots) உலக மலையேற்ற வீரர்களிடையே ‘கிரீன் பூட்ஸ்’ என்ற பெயரிலேயே இவரது உடல் ஓர் அடையாளக் குறியீடாக மாறியது. கடல் மட்டத்திலிருந்து 8,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாகவும் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் ‘மரண மண்டலத்தில்’ (Death Zone) அமைந்திருந்ததால், இந்த உடலை மீட்பது மிகவும் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.
தற்போது, இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் சிறப்புப் பயிற்சி பெற்ற உயர்மட்டக் குழுவினர் மூலம் இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீன அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அரசின் நிதியுதவியுடனும் மீட்கப்படும் உடல், டி.என்.ஏ சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவரின் உடல் கிடைக்கப் பெறுவது குறித்து 75 வயதான மோரூப்பின் மனைவி நெகிழ்ச்சியுடன் கூறுகையில், “பல இரவுகளில் யாரோ கதவைத் தட்டுவது போலவும் என் கணவர் வந்துநிற்பது போலவும் உணர்ந்திருக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் என்னை விட்டுப் பிரிந்திருந்தது நியாயமா என அவர் வரும்போது கேட்பேன்,” எனத் தெரிவித்தார். மோரூப்பின் இறுதிச் சடங்குகளை கௌரவமாக நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சை நிறப் பூட்ஸை தங்களது குடும்பப் பரம்பரை நினைவாகப் பாதுகாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.














