அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தலா 150,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 260 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கிலோ ஒன்றுக்கு 350 ரூபாய்க்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வழக்குத் தொடரப்பட்டது.
வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று, கிலோகிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா (GR 11) அரிசியை கிலோ ஒன்றுக்கு 260 ரூபாய்க்கு விற்பனை செய்த மற்றொரு வர்த்தகரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கும் 150,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.















