மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு,முள்ளாமுனை,பத்தரைக்கட்டை,கன்னங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலேயே இந்த விசேட முற்றுமை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் அறிவுறுத்தலின் கீழ் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தலைமையிலான குழுவினர் இந்த முற்றுகையினை முன்னெடுத்தனர்.
இப்பகுதிகளில் உள்ள ஆறுகளை அண்டியுள்ள காட்டுப்பகுதியிலேயே சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.
இதன்போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் சுமார் 130 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மீட்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் சொந்தப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் இம்மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் மற்றும் பியர் விற்பனை செய்த 25 வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.