மலையகக் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிய ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் கடந்த 23 ஆம் திகதி தனது கடமையில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு நோர்வூட் பாடசாலையில் ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் அதன் பின்னர் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
குறித்த கால கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தினையும், தேசிய கல்வி நிறுவகத்தின் பிஜிடி (PGD) பட்டத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது இந்திய பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியினைப் பயின்று( ரீஸோஸ் மெனேஜ்மன்ட் கற்கைநெறியினையும் எடியுகேசன் டிப்ளோமா) முதல் நிலையில் சித்தியினையும் பெற்றுள்ளார்.
மேலும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவைக்குள் 2000ம் ஆண்டு நுழைந்த அவர் 2009ம் ஆண்டு கொத்மலை கல்வி வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளராகவும் கடமையேற்றார்.
இவரது காலத்தில் 28 சதவீதமாக காணப்பட்ட குறித்த கல்வி வலயத்தின் பெறுபேறுகள் 41.5 சதவீதமாக மாற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து 2016ம் ஆண்டு பெப்ரவரி 10ம் திகதி ஹட்டன் கல்வி வலயத்தில் கல்விப்பணிப்பாளராக நியமனம் பெற்ற அவர் ஹட்டன் கல்வி வலயத்தின் பெறுபேறுகள் உயர்வடைய காரணமாகவும் செயற்பட்டார்.
இவ்வாறு தன்னையும் சார்ந்தவர்களையும் மாற்றத்திற்கு உட்படுத்தி அழியாத வரலாற்றினை பதிவு செய்த ப.ஸ்ரீதரனின் ஓய்வுக் காலம் சிறப்பாக அமைய ஹட்டன் கல்வி சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.