எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாய் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாயை இன்று (திங்கட்கிழமை) அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள மறைமுகமாக செயற்பட்ட குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரில் எதிர்வரும் காலங்களில் மலையக இளைஞர்களுக்கு அதிகமான மலேசிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.