இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து 280 கிலோமீற்றர் வட-வடகிழக்கே நிலைகொண்டுள்ளது.
நேற்று (09) இரவு 08.30 மணிக்கு, இந்த சூறாவளி, வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையின் ஊடாக இன்று அதிகாலை கடந்தது.
எனினும் அதன் பின்தாக்கமாக, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும்.
அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.