தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (13) அதிகாலை 03.00 மணியளவில் 40 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து சித்தூர் நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தினை அடுத்து பயணிகள் பஸ்ஸில் இருந்து விரைவாக வெளியேறியுள்ளனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக பெண்ணொருவர் சம்பவத்தில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.