தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார்.
இதன்போது அவருக்கு ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தனது கட்சி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆட்சி அமைக்க அனுமதி கோரும் அதிகாரப்பூர்வ கடிதத்தை விஜய் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
த.வெ.க-வுக்குத் தேவையான கூடுதல் ஆதரவை வழங்க காங்கிரஸ் (5 இடங்கள்), சிபிஐ (2), சிபிஎம் (2) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகள் முன்வந்துள்ளதால், விஜய்யின் பலம் 119 ஆக உயர்ந்து பெரும்பான்மை உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை (மே 07) காலை 11.30 மணி அளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்கவுள்ளார்.
விஜய்யுடன் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளவர்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் சக்தியாக விஜய் அரியணை ஏறவுள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் த.வெ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.













