தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இன்று (04) பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
இந்தி மொழியைத் திணிக்கும் வெறியில் பாரதிய ஜனதாக் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, “உச்சரிக்க முடியாத” இந்தி பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களில் வெறுமனே மொழிபெயர்த்து வருவதாகவும், இந்தி திணிப்பு மீதான “வெறிக்கு” எதிராக பாஜகவை எச்சரிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.



இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர்,
‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான செயலில் பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.
திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது.
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் செய்தார்கள்.
தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும்.
இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் – என்று குறிப்பிட்டார்.














