இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் அத்தியாயம் மே 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தரம்சாலா விளையாட்டரங்கில் மே 8ஆம் திகதி இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அயல் நகரங்களில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.
அடுத்த நாள் ஐபிஎல் போட்டிகளை இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்தது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மிண்டும் இடம்பெறவுள்ளது. எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் 6 மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, லக்னோவ், மும்பை, அஹமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரண்டு போட்டிகள் நடைபெறும்.
ப்ளே ஓவ் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அவற்றுக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது தகுதிகாண் போட்டி மே 29ஆம் திகதியும் நீக்கல் போட்டி மே 30ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி ஜூன் 1ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.



















