இலங்கை ‘ஏ’, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
தம்புள்ளையில் உள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணியும், நிரோஷன் திக்வெல்ல தலைமையிலான இலங்கை ஏ அணியும் மோதவுள்ளன.
இந்தப் போட்டியில் 15 வயதான இந்திய அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.
ஏற்கனவே இந்தியாவின் ஆதிக்கம் செலுத்தும் டி20 அணியில் இடம்பெற்றுள்ள சூர்யவன்ஷி, தற்போது இலங்கையின் சுழற்பந்துக்குச் சாதகமான ஆடுகளங்கள் மற்றும் நீண்ட 50 ஓவர் வடிவத்தில் ஒரு வித்தியாசமான சவாலை எதிர்கொள்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா U-19 அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த இந்த இடது கை ஆட்டக்காரர், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளிலும் அந்த வெற்றியை மீண்டும் பெற ஆர்வமாக இருப்பார்.
இந்த இளம் வீரர் விரைவாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்வார் என்று இந்தியா ‘ஏ’ பிரிவு தலைவர் திலக் வர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
மெதுவான ஆடுகளங்கள் அவரது அணுகுமுறையைச் சோதிக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டாலும், இளையோர் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, சூர்யவன்ஷியின் வெற்றி பெறும் திறனில் திலக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.















