நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி, சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது, பிரதான சந்தேக நபர் முகக்கவசம் அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல வேடமணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின்போது, வவுனியாவிலிருந்து குருணாகலுக்குச் சென்று தனது ஏனைய இரண்டு குழந்தைகளைப் பார்த்துவிட்டு, பின்னர் பொலிஸாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாக அந்தச் சந்தேகநபர் புலனாய்வாளர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததாகவும், கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வாகனம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர்; பின்னர் அதனை வலுக்கட்டாயமாகத் திறந்து சோதனையிட்டபோது, உள்ளே சடலம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது காதலர், அப்பெண்ணின் உடலை வாகனத்தில் கொண்டு வந்து அந்த இடத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணையில், அந்தப் பெண் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது.
அந்தக்காலகட்டத்தில் அவர் சுயநினைவின்றி இருந்தபோது, அவரது காதலர் அவரைத் தூக்கிச் செல்வதை சிசிடிவி (CCTV) காட்சிகள் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெல்தெனிய பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட முறைப்பாடு அப்பெண்ணின் காதலன் எனக் கருதப்படும் ஒருவரால் வழங்கப்பட்டது என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், அவர் பின்னர் தலைமறைவானதுடன், கைது நடவடிக்கையிலிருந்தும் தப்பித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.












