மியான்மர் கடற்பரப்பிற்கு அப்பால் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜக்கிய நாடுகள் சபையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலவும் மோசமான காலநிலை மற்றும் கடலின் கொந்தளிப்பான தன்மையைப் பொருட்படுத்தாமல், கொள்ளளவை விட அதிகமான மக்களை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைச் சம்பந்தப்பட்ட பிரிவினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியன்மாரில் நீடித்துள்ள வன்முறைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் படகுகள் மூலம் கடல்வழியாகப் பயணித்த 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், மோசமான வானிலை காரணமாக படகுகள் கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கிய இடம்பெயர்வு அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் மியன்மாரின் மேற்கு ராகினே மாநிலத்திலிருந்து சுமார் 250 பயணிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று, புறப்பட்ட சில நாட்களிலேயே தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.
சுமார் 280 பயணிகளுடன் பயணித்த மற்றுமொரு படகு, கடந்த ஜூலை 8 ஆம் திகதி மியன்மாரின் அயேயர்வாடி கடற்கரைக்கு அப்பால் கடலில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
வழக்கமான கடல் பயணக் காலம் அல்லாத, மிக மோசமான கடல் கொந்தளிப்பு, பலத்த மழை மற்றும் பிராந்திய வெள்ளப்பெருக்கு நிலவும் தற்போதைய ஆபத்தான சூழ்நிலையிலேயே இந்த இரண்டு படகுகளும் பயணித்துள்ளன.
மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடூரமான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















