ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மற்றும் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (IPG) ஆகியவை, ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்போர்ட்ஸ் கம்யூனுடனான (Sports Commune) உரிம ஒப்பந்தத்தை வியாழக்கிழமையன்று (23) இரத்து செய்தன.
ஒப்பந்தத்தின்படி உரிமையாளர் (franchisee) தனது நிதிசார் கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலையிலேயே இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
Sports Commune நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் நிதியை வழங்கத் தவறியதால், ஜூலை 22 அன்று நடைபெற்ற போட்டியின்போது வீரர்கள் தங்கள் ஜெர்சிகளில் இருந்த ஸ்பான்சர் லோகோக்களை கருப்பு நிற டேப் மூலம் மறைத்துக்கொண்டு களமிறங்கியதாக Cricinfo செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.
அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஜோத் கல்ரா, கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலங்கை விளையாட்டுத் துறை விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சிக்கல் ஏற்பட்டது.


ஊடகச் செய்திகளின்படி, மற்றொரு இணை உரிமையாளரான மயங்க் கோயல், இலங்கைக்கு வந்த பின்னர் அவரைத் தொடர்புகொள்ளவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியவில்லை.
தற்சமயம் நான்கு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள அணி தொடர்பான அனைத்து உரிமைகளும் இப்போது IPG மற்றும் SLC ஆகியவற்றிடம் திரும்பியுள்ளன.
இவையே அந்த அணியின் முழுமையான செயல்பாட்டு நிர்வாகத்தையும் மேற்கொள்ளவுள்ளன.
நிதி மற்றும் ஒப்பந்த விதிமீறல்கள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் போட்டி அமைப்பாளர்களான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குழு ஆகியவை தங்கள் உரிமையை இரத்து செய்த போதிலும், ஜப்னா கிங்ஸ் அணி 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து பங்கேற்கும்.












