ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக’ (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் நிறைவேற்றப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தினம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
அந்த வகையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இம்முறை சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிவதற்கான உரிமை, நீதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகியவற்றை மையப்படுத்துவதோடு, உலகளாவிய ரீதியில் இந்தச் சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இத்தினம் வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த தினமானது, காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவுகூரவும், அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே பிரதானமாக அனுசரிக்கப்படுகின்றது.













