மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு திறந்த பிடியாணைகளை மீண்டும் பிறப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
குறித்த முறைப்பாடு நேற்று (11) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நிதி மோசடி சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக சி.ஐ.டி.யினரால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.
முறைப்பாடு அழைக்கப்பட்டபோது, பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பின்வரும் பணிப்பாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன, பி.எம். குணவர்தன மற்றும் முத்துராஜா சுரேந்திரன்
எனினும், மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்களான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர்கள் வருகை தராததைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு சந்தேக நபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக திறந்த பிடியாணைகளை மீண்டும் பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதி குற்றப் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
மேலும், தொடர்புடைய முறைப்பாட்டை அடுத்த ஆண்டு மே 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
















