இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊழியர்கள் நுழைவழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற வேளை ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் நுழைவு என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் இரத்தம் வழிந்தது.
முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முறைப்பாடு அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
















