நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக முன்னிலையாகிவிட்டுத் திரும்பிய இரண்டு சட்டத்தரணிகளை வழிமறித்து, மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களது வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை முடித்துவிட்டு சட்டத்தரணிகள் இருவரும் தமது வாகனத்தில் வெளியேறியுள்ளனர்.
நுகேகொடை ‘கம்சபா’ சந்திக்கு அருகே ஒரு குழுவினர் சட்டத்தரணிகளின் வாகனத்தை வழிமறித்துச் சூழ்ந்துள்ளனர்.
குறித்த குழுவினர் சட்டத்தரணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன், அவர்களது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.இது சட்டபூர்வமான கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
நேற்று அதிகாலை, மிரிஹான பொலிஸ் குழுவினர் மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஜுலந்தவத்தை பகுதியில் வைத்து 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
சட்டவிரோதமாகக் கூடுதல், குற்றவியல் அச்சுறுத்தல், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடையாள அணிவகுப்பிற்காக இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டத்தரணிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் நீதித்துறை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுவதால், ஏனைய குற்றவாளிகளையும் விரைவாகக் கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.














