ராஜஸ்தானின் அஜ்மீரில் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக ஒரு பிரித்தானிய தம்பதியினர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புஷ்கரில் உள்ள புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அரசியல் பிரச்சாரங்கள் அல்லது வக்காலத்துகளில் ஈடுபடுவதைத் தடைசெய்யும் விசா விதிகளை இந்த நடவடிக்கைகள் மீறுவதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் கீழ் பெப்ரவரி 2 ஆம் திகதி பிரித்தானிய தம்பதியருக்கு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரித்தானிய பிரஜைகளான லூயிஸ் கேப்ரியல் டி மற்றும் அனுவேஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசாக்களில் இந்தியாவில் பயணம் செய்து புஷ்கரில் தங்கியிருந்தனர்.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இருவரும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் இஸ்ரேலை எதிர்த்தும் சிறிய ஸ்டிக்கர்களை நகரம் முழுவதும் பல்வேறு பொது இடங்களில் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் இருவரையும் கண்டுபிடித்தனர்.
பின்னர், பொது இடங்களில் இருந்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
விசாரணையின் போது, இந்திய சட்டத்தின் கீழ் இவர்கள் சுற்றுலா விசாக்களை வைத்திருந்த போதிலும், இரண்டு சுற்றுலாப் பயணிகளும் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து இருவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் நுழைவதில் இவர்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


















