பிரான்சின் தென் மாவட்டங்களை கடும் புயல் சூறையாடி வருகிறது. இன்று , நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக தகவல்களின் படி, சற்று முன்னர் ஒருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது. கனரக வாகனம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார் Landes நகரில் இச்சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.
வெள்ளம் மற்றும் பனிச்சரிவு காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அதிகபட்சமான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக கொட்டித்தீர்க்கும் மழையினால் Gironde மற்றும் Lot-et-Garonne ஆகிய இரு மாவட்டங்களுக்கும், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி காரணமாக Aude மாவட்டத்துக்கும், பனிச்சரிவு காரணமாக Savoie மாவட்டத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக 850,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக மின் விநியோகம் செய்யும் Enedis நிறுவனம் அறிவித்துள்ளது. Nouvelle-Aquitaine மாவட்டத்தில் 485,000 வீடுகளும், Occitanie மாவட்டத்தில் 318,000 வீடுகளும் இதில் உள்ளடங்குகிறது.
Aude மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பூங்காக்கள், புல்வெளி தோட்டங்கள், கல்லறைகளும் பொதுமக்கள் பாவனைக்கு மூடப்படுகின்றன.
















