கொலை வழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஒருவர், காவல்துறையினரால் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டிருக்கலாம் (Framed) என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிபிசி பனோரமா கண்டறிந்துள்ளது.
தென்கொரிய மாணவி ஜோங்-ஓக் ஷின் (Jong-Ok Shin) கொலை வழக்கில், ஓமர் பென்குயிட் (Omar Benguit) என்பவருக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியம், சிசிடிவி (CCTV) ஆதாரங்களுக்கு முற்றிலும் முரணானது என்பது காவல்துறைக்குத் தெரிந்தே இருந்தது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சாட்சியமளித்த 13 பேர், நீதிமன்றத்தில் பொய் சொல்ல அல்லது வாக்குமூலங்களை மிகைப்படுத்திக் கூற பொலிஸார் தங்களை வற்புறுத்தியதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓமர் பென்குயிட்டிற்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பில்லை என்பதை நிரூபிக்கும் தொலைபேசி பதிவுகள் மற்றும் ஆதாரங்களை பொலிஸார் மறைத்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கின் முக்கிய சாட்சியாளர் கூறிய கதையை சிசிடிவி காட்சிகள் பொய்யாக்கின எனவும் ஆனாலும், பொலிஸார் ஒரு பொய்யரின் சாட்சியத்தை வைத்தே வழக்கை நகர்த்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002-ஆம் ஆண்டு போர்ன்மவுத் (Bournemouth) இரவு விடுதியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது ‘ஓகி’ என்று அழைக்கப்படும் ஜோங்-ஓக் ஷின் (Jong-Ok Shin) குத்திக் கொலை செய்யப்பட்டார்.
போதைப்பொருள் மற்றும் கத்திக்குத்து வழக்குகளில் தொடர்புடைய பென்குயிட், 2005-ல் நடந்த மூன்றாவது விசாரணையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
போர்ன்மவுத் பொருளாதாரம் சர்வதேச மாணவர்களைச் சார்ந்து இருந்ததாலும், தென்கொரிய அரசாங்கத்தின் அழுத்தத்தாலும் கொலையாளியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் டார்செட் (Dorset) பொலிஸார் இருந்த நிலையில் பென்குயிட் போலீசாரால் கைது செய்யப்பட்டமை குறிபிடத்தக்கது.
ஓய்வுபெற்ற கொலை வழக்குப் புலனாய்வு அதிகாரி பிரையன் மர்பி, வழக்கு குறித்த ஆதாரங்களைப் பரிசீலித்த பின்னர் , “இந்த வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பென்குயிட்டின் வழக்கறிஞர் (Des Jenson) டெஸ் ஜென்சன் கூறுகையில், “பொலிஸார் சாட்சிகளைப் பொய் சொல்லத் தூண்டியிருந்தால், அவர்கள் நீதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















