மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாலும், வளைகுடா முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாலும், வியாழக்கிழமை (19) காலை ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் விலை 4.27% உயர்ந்து 112.00 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை 2.73% உயர்ந்து 98.95 அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.
தனது தெற்கு பார்ஸ் எரிவாயு தளங்கள் மீது முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்த அண்மைய விலை உயர்வு ஏற்பட்டது.
உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையமும், உலகளாவிய எரிவாயு விநியோகத்தின் முக்கிய தூணுமான ராஸ் லஃபான் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் தனது ஹப்ஷான் எரிவாயு நிலையத்தில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.
மேலும், இடைமறிக்கப்பட்ட எறிகணைகளின் சிதறல்கள், பாப் எண்ணெய் தளங்கள் உள்ளிட்ட மேலதிக எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஈரானால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 19 ஆளில்லா விமானங்களையும், ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளையும் வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்திற்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் நீடித்த நிலையில், ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே ஒரு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து தீப்பிடித்ததாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களும், பிராந்திய எரிசக்தி நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட முந்தைய வெளியேற்ற எச்சரிக்கைகளும், விலைகளை உயர்த்துவதற்காகவும் அதன்மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவும் வளைகுடாவின் எரிசக்தி முதுகெலும்பைக் குறிவைக்கும் ஈரானின் உத்தியை வெளிப்படுத்துகின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கும் விதமாக, அப்பகுதிக்குக் மேலதிக இராணுவங்களை நிலைநிறுத்துவது குறித்து அமெரிக்கா தற்போது பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பதற்றம் தணியும் அறிகுறிகள் தென்படாததால் எண்ணெய் விலைகள் மீதான உயர்வு அழுத்தம் தொடரும் எனத் தெரிகிறது.

















