2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நியச் செலாவணி நிலையைப் பொறுத்தே எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதாகும் என்றார்.
அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகன இறக்குமதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இந்த ஆண்டு வாகன இறக்குமதிகளின் மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக எரிபொருள் தேவையும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இறக்குமதியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தற்காலிக நடவடிக்கையாகவே சுங்க மேலதிக வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.
எனவே, டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் அந்த வரி நீக்கப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும், அந்நேரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி நிலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரி செலுத்துவோர் அடிப்படை விரிவடைந்து வரி அறவீடு மேம்படும் நிலையில், மறைமுக வரிகள், நேரடி வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் ஆகியவற்றை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அந்நியச் செலாவணி கையிருப்பும் அரச வருமானமும் மேலும் நிலையான நிலையை அடைந்த பின்னர் எதிர்காலத்தில் அதுபற்றிய பரிசீலனை மேற்கொள்ளப்படலாம் என்றார்.
தனிநபர்கள் மீதான வரிச் சுமையைக் குறைத்து, வாகனங்களை அதிகளவு மக்களுக்கு எட்டக்கூடியதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகால கொள்கை எனவும், அதற்கான மாற்றங்கள் படிப்படியாகவே மேற்கொள்ளப்படும் எனவும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.















