2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாளை (17) ஆரம்பமாகவுள்ள பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே மேலும் குறிப்பிட்டார்.
நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். அத்துடன், பிற்பகல் நேரப் பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் மதியம் 12.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.













