நாட்டில் மாலை ஆறு மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை பொது மக்களுக்கு வழங்கி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கு எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கியிருந்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, உலகின் ஒவ்வொரு நாடும் தொடர்ச்சியான எரிசக்தி விநியோகத்தைப் பேணுவதில் ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், எரிசக்தியை முறையான மேலாண்மை வழியில் பயன்படுத்துவதன் மூலம், நாடு எதிர்கொள்ளும் சவாலைச் சமாளிப்பதற்கு நிறுவன ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இயன்ற அதிகபட்ச பங்களிப்பைச் செய்வது அனைவரின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த சில வாரங்களில் எரிசக்தி மேலாண்மை தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயல்படுத்துவதன் மூலம், பொதுச் சேவைக்கு, குறிப்பாக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
எரிசக்தி நுகர்வை முறையாக நிர்வகிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.














